அல்லாஹ் முனாஜாத்


LYRICS


அல்லாஹ் முனாஜாத்
கீழக்கரை பல்லாக்குத் தம்பி ஒலியுல்லாஹ் (ரஹ்மதுல்லாஹி அலைஹி)

1
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்வே
அடியாரைக் காக்கும் அல்லாஹ்வே
எல்லாம் வல்ல அல்லாஹ்வே
எங்களைக் காக்கும் அல்லாஹ்வே
ஸல்லல் லாஹுநபி பொருட்டாலும்
சங்கடம் போக்கும் அல்லாஹ்வே
இல்லல் லாஹ் வெனும் அல்லாஹ்வே
ஏழை எங்களைக் காப்பாயே!

2
அவ்வ லோனே ஆகிரோனே
அடிமுடி ஒன்றும் இல்லானே
எவ்வுயி ருக்கும் இரணம் எல்லாம்
எழுகடல் வானம் பூமியெல்லாம்
ஒவ்வும் படியாய் அமைத்து வைத்து
உவப்புடன் எவ்வுயிர்க் கெல்லாமும்
செவ்வையாய் உதவி யீபவனே
சிறப்பாய் எங்களைக் காப்பாயே!

3
அன்னையும் தந்தையும் நீதானே
ஆளும் ராஜனும் நீதானே
என்ன பிழைகள் செய்தாலும்
எதையும் பொறுப்பவன் நீதானே
நின்னயமான ஆயுட்களை
நீடிப்பவனும் நீதானே
பின்னயமான பலாய் களெல்லாம்
பிரிய அருள் செய் றஹ்மானே!

4
தொற்று நோயும் தொடர் நோயும்
திடீரெனக் கொல்லும் வபாநோயே
சித்தம் பதறும் இந்நோயை
சிறிதும் ஊரில் நில்லாமல்
பற்றி அடித்துத் துரத்திடுவாய்
பரனே எங்களைக் காப்போனே
கர்த்தா இகபரம் படைத்தோனே
காப்பாய் எங்கள் றஹ்மானே!

5
ஆதம்நபிகள் பொருட்டாலும்
அதன்பின் நபிகள் பொருட்டாலும்
நீதி நம் பிராட்டிகள் பொருட்டாலும்
நான் குயர் சஹாபாக்கள் பொருட்டாலும்
வேத மொழிப்படி நடந்தொழுகும்
வலிமார் குத்புகள் பொருட்டாலும்
சீதநோய்கள் பலாய்க ளெல்லாம்
தீர்ப்பாய் எங்கள் றஹ்மானே!

6
உலகில் முஃமின்கள் பொருட்டாலும்
உண்மை முஸ்லிம்கள் பொருட்டாலும்
நலமுறுந் தவத்தோர் பொருட்டாலும்
நல்லடியார்கள் பொருட்டாலும்
பலமுறும் கொடையோர் பொருட்டாலும்
பசித்தோர்க் களித்தோர் பொருட்டாலும்
தலமீ துறும் பெரும் பலாய்க ளெல்லாம்
தடை செய்தருள்வாய் றஹ்மானே!

7
கண்ணை இமை போல் காப்பவன் நீ
கல்லினுள் தேரையைக் காத்தவன் நீ
எண்ணுறு நாம முள்ளவன் நீ
ஏகமு நிறை ஸம தானவன் நீ
பெண் ஆண் என வகை படைத்தவன் நீ
பெரும் பெரும் ஆலங்கள் வகுத்தவன் நீ
மண்ணில் வந்த வபா நோயை
மறைந் தொழிந் திடச் செய் றஹ்மானே!

8
நேர்வழி ஃபுறுக்கான் தந்தவன் நீ
நின்னடி யார்களைக் காப்பவன் நீ
பேர் பெருஞ் செல்வங்கள் தருபவன் நீ
பிரியமாய் எங்களைக் காப்பவன் நீ
கூர்மை அறிவுகள் தருபவன் நீ
குறைவற உஜீபனந் தருபவன் நீ
ஊரில் வந்த பலாய்களெல்லாம்
ஓட்டி அழித்திடு றஹ்மானே!


9
அற்பமாம் கர்ப்பக் குவளறையில்
அன்புடன் எங்களைக் காத்தவன் நீ
உற்பத் தீரைந்து மாதங்களில்
உறுப்புடன் உலகில் விட்டவன் நீ
நற்சுக மாய்த்தவழ்ந் தெழுந்திருந்து
நடக்கவும் இருக்கவும் வைத்தவன் நீ
துர்க்குண முள்ளநோ யெங்களிடந்
தொடரா தருள்செய் றஹ்மானே!

10
ஆறா யிரத்தி அறு நூற்றி
அறுபத் தாறு ஆயத்தினில்
சூறா நூற்றில் பதினான் கில்
சொல்லும் ஏவல் விலக்கல் களைக்
கூறி முடித்திற சூல்மூலம்
குஃபிர்கள் விலகச் செய்தவன் நீ
தேறும் இவ்வே தப் பொருட்டால்
தீர்ப்பாய் குறைகள் றஹ்மானே!

11
வாதம் பித்தம் சிலேத் மங்களில்
வகை வகையாய் வரும் பெரும் நோய்கள்
பேதமுறும் பெரும் பைத்தியங்கள்
பிச குறும் காசங்கண் ணோசை
தீதுறும் வாத மென்பது வந்
தீராப் பக்க வாதங்களும்
ஏதும் வாரா தெங்களுக்கு
இரங்கிக் காப்பாய் றஹ்மானே!

12
ஜுரங்கள் ஜன்னிகள் சூதக நோய்
துன்பஞ் செய்யும் பெரும்பாடு
முரண்கள் செய்யும் மூல நோய்
முகங்கால் வீங்கும் பாண்டு நோய்
சிர நோயான பித்த நோய்
சிரமஞ் செய்யும் நீரிழிவு
பிறவும் நோய்க ளணு காமல்
பேணிக் காத்தருள் றஹ்மானே!

13
கொம்பன் படுவன் அக்ரமெனுங்
கொடிய வாந்தி பேதிநோய்
வெம்பும் வெள்ளை வெட்டை நோய்
வெறுப்புறும் அம்மை வைசூரி
அம்புவிக்காகா பிளேக் நோயும்
ஆறாக் குஷ்டப் பதினொண்ணோய்
துன்பஞ் செய்யும் பல நோயும்
தொடரா தருள்செய் றஹ்மானே!

14
கண்ட நோயும் கண்ணோயும்
கர்ப்பா சயத்தில் வரும் நோயும்
அண்ட நோயும் அபநோயும்
அஷ்ட குன்மங் கொடுவாய்வும்
தண்ட நோயும் தடைநோயும்
தடிக்கா லானைக் கால் நோயும்
சண்டி நோயும் வாராமல்
தயவாய்க் காத்தருள் றஹ்மானே!

15
கண்ணோய் தொண்ணூற் றாறு வகை
கடின மான மண்டை நோய்
பெண் ஆண் மலடு பேர் வருத்தம்
பிடுங்கிப் பிழியும் வயிற்று வலி
உண்ணா திருக்கு மோங்காரம்
உருட்டுப் புரட்டு சதிவிக்கல்
ஃகன்னா சால்வரும் நோய்களெலாம்
காணாதருள்செய் றஹ்மானே!

16
பில்லி சூனியம் மனப் பேதம்
பிரிந்திடச் செய்யும் முகமாற்று
கொல்ல நினைத்துச் செய் சூது
குறளி யேவல் மாரணங்கள்
வெல்லுங்கண் மம்சா பங்கள்
விதியினால் வரும் துன்பங்கள்
பொல்லா வறுமை நோய்களையும்
நில்லா தருள்செய் றஹ்மானே!

17
துர்குண முள்ள ஜின் ஷைத்தான்கள்
தேவதை மற்றும் பிசாசினங்கள்
பற்பலவான குபா டங்கள்
பகை வரினால் வரும் இடையூறு
அற்பர்களின் சக வாசங்கள்
அறநெறி தவறுந் துவேஷங்கள்
தப்பித முள்ளபெருந் தங்கடமும்
தளர்த்தி யருள்வாய் றஹ்மானே!

18
ஆங்கார முடன் வரும்நோயும்
அவுஷ தமில்லா மாநோயும்
ஏங்கித் திணறும் மரண நோய்
ஈழை யிளைப்பு நீரடைப்பு
நான்கா யிரத்தி நானூற்றி
நாற்பத் தெட்டு நோய்களையும்
நாங்கள் காணா தோடிடச் செய்
நல்வழி காட்டும் றஹ்மானே!

19
திருடர் தனிவழி ஆபத்தும்
தீயி னால் வரும் தங்கடங்கள்
மிருகங் களினால் ஆபத்தும்
மிடிமையி னால் வரும் முஸீபத்தும்
அரவங் கடிவிஷம் மறு விஷங்கள்
ரணங்கள் கட்டிகள் பிளவைகளும்
திருஷ்டிகள் யாவும் அணுகாமல்
தயவாய்க் காத்தருள் றஹ்மானே!

20
பயிர்கள் தாவர வர்க்கங்கள்
பலந்தரும் மரங்கொடி பச்சைகள்
உயிர்கள் யாவும் சேமமதாய்
ஓங்கி வளர்ந்திட உன்னருளால்
தைரி யந்திட தேகமுற
நின்றுனை நாங்கள் வணங்கிடவே
ஃகைராய் மழையைப் பொழிந்தருள் வாய்
கருணைக் கடலே றஹ்மானே!

21
நெல்நவ தானிய நிலைகொண்டு
நிகரில் லாமல் விளையுண்டு
பல்நக ரெல்லாஞ் செழிப்புண்டு
பசியெனுஞ் சொல்லெல் லாமாண்டு
அல்வழி யென்னுந் துயரகன்று
அனுதின முன்னைத் துதிகொண்டு
நல் நிலை பெறவரம் ஈந்தருள்வாய்
நலமார் எங்கள் றஹ்மானே!

22
நெஞ்சம தால் வரும் பாவங்கள்
நேர்வழி தவறிய பாவங்கள்
வஞ்சனை யாயுறும் பாவங்கள்
வாய் கரங் கால் செய்பாவங்கள்
சஞ்சல முறும் பெரும் பாவங்கள்
ஷறஹினை யிழந்த பாவங்கள்
மிஞ்சிடுஞ் சிறிய பாவங்கள்
முழுதும் போக்கிடு றஹ்மானே!

23
குருமொழி கொள்ளாப் பாவங்கள்
குறைபல செய்த பாவங்கள்
அருள்வழி செல்லாப் பாவங்கள்
அன்னையர் நொந்த பாவங்கள்
திருமொழி தள்ளிய பாவங்கள்
தந்தையர் நொந்த பாவங்கள்
கருவினில் அமைந்த பாவங்கள்
எல்லாம் போக்கிடு றஹ்மானே!

24
வறுமை பஞ்சம் ஊழ்வினையும்
வகையறு நாசத் தப்பிதங்கள்
சிறுமை சின்னஞ் செய்பிழையுஞ்
சிலபல ரகசிய பாவங்கள்
மறுமை நினையாப் பாவங்கள்
மடைமை மாசுறும் எண்ணங்கள்
நிறைந்த பாவம் அடங்கலையும்
நிவர்த்தி யருள்வாய் றஹ்மானே!

25
‘பல்லாக்குத் தம்பி’ யெனும் மிஸ்கீன்
பகர்ந்த அல்லாஹ் முனாஜாத்தால்
பொல்லாத் துன்பந் துயரகலப்
பேணும் நல்வழி யும் சேர
எல்லா முஸ்லிம் ஆண் பெண்கள்
இதயம் மகிழ்ந்து ஓதிவர
அல்லாஹ் வல்ல பெரியோனே
அருள்வாய் ஆமீன் றஹ்மானே!