பாடல்: 6
1. பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீ மென்றோதி
இஸ்லாத்தின் நாயகியை இனிதாய் புகழ்வோமே
2. எல்லாப்பு கழினையும் இறையோற் குரித்தாக்கி
வல்லார் நபீமீது வாகாய் ஸலாத்துரைப்போம்
149. நாளெல்லாம் நீரிரைத்தும் நாயகியார் மாவரைத்தும்
தோளெல்லாம் கடுகடுக்கும் திருக்கைகள் கொப்புளிக்கும்
150. இல்லத் தரசியரே எல்லாவினை களையும்
ஒல்லாது செய்வதனால் உடையாவு மழுக்கேறும்
151. பட்டினியில் கிடப்பார்கள் பன்னாட்கள் யார்வருவார்
திட்டமுடன் வீட்டுவேலை செய்வார்கள் வலியுடனே
152. இத்தயை முன்மாதிரி இன்றுள்ள பெண்களெல்லாம்
சித்தமுடன் பின்பற்றிடின் சீரிஸ்லாம் செழித்திடுமே
153. நாயகத்தின் வீட்டினுக்கு நாயகியார் அண்டினார்கள்
தூயநல்ல வேலைக்காரி துணைக்காக வேண்டுமென்றார்
154. அப்போது தூதர்நபி அன்பான மகளழைத்து
எப்போதும் உங்களுக்காம் இறையோனின் அருளென்றார்
155. அருமை மகளாரே அமர்தன்னில் இறந்தவர்கள்
பெருமை மக்கள்தம்மை பெற்றுவந்தோம் காப்பாற்ற
156. நாமும் அவர்கள்மீது நளினமாய் நடத்தல்வேண்டும்
சீமானின் அருளெம்மைத் தேடிவரும் கவலாதீர்
157. அதற்குப் பதிலாக அன்றாடம் படுக்கைக்கு
நிதமும் போகமுன்னர் நீர்மையுட னமர்ந்திருந்து
158. முப்பத்து மூன்றுமுறை முழுமையாய் ஸுபுஹானள்ளா
முப்பத்து மூன்றுமுறை முற்றாயல் ஹம்துலில்லா
159. அல்லாஹு அக்பரென்றே முப்பத்து நான்குமுறை
எல்லாம் ஒழுங்காக இனிதாயே ஓதிடுவீர்
160. என்றார்க ளுயிர்த்தந்தை என்றுமிது நல்ல தென்றார்
அன்றாடம் செய்துவந்தால் அதுமட்டும் போது மென்றார்
161. இவ்வாறு செய்துவர இறையோனை யவனபியை
செவ்வையாய்ப் பொருந்திக்கொண்டார் தீதறவே பாத்திமத்தே
162. இறையோனை நாயகத்தை என்றென்றும் பொருந்திக் கொள்வோம்
நிறைவான இவர்மதிபோல் நினைத்தே நடந்து கொள்வோம்
163. இல்லாத நிலையிலுந்தான் இரப்போர்க்கே யீந்துவந்தார்
எல்லார்க்கும் வள்ளலென வளமாய் நடந்து கொண்டார்
164. இல்லையில்லை யென்பதில்லை உள்ளததை யீந்திடுவார்
இல்லில் லில்லா தாயினுந்தான் உள்ளிலுள்ள தைக்கொடுப்பார்
AUTHOR: J.S.K.A.A.H MOWLANA