மங்கலம் பொங்கிடும் ரமழான்
மங்கலம் பொங்கிடும்
மாதமாம் ரமழான்
எங்கெங்கும் நிறைந்தோன்
ஏற்றிடும் ரமழான்
தங்க நபி நாதரும்
போற்றிடும் ரமழான்
இன்பங்கள் சேர்த்திடும்
இணையில்லா ரமழான்
பங்கங்கள் போக்கிடும்
பாக்கியம் ரமழான்
அங்கங்கள் பணியவே
செய்திடும் ரமழான்
=====
வானவர் இறங்கும்
வாசமாம் ரமழான்
பாவங்கள் கரிக்கும்
பாசமாம் ரமழான்
நேர் வழி செலுத்தும்
நேசமாம் ரமழான்
இறைக் காதலரின்
சுவாசமாம் ரமழான்
மர்ஹபன் அஹ்லன்
வஸஹ்லன் ரமழான்
வருகவே வருகவே
வாஞ்சையாம் ரமழான்
=====
தித்திக்கும் தேன் மறை
தெவிட்டிடாமல் நிதம்
வாஞ்சையாய் ஓதவே
வழி காட்டும் ரமழான்
திக்ரு ஸலவாத் தொலி
திக்கெங்கும் முழங்க
கல்பினில் பேரொளி
ஏற்றிடும் ரமழான்
=====
நாயனின் காட்சியை
கண்டிடும் ஆனந்தம்
இஃப்தாரின் பொழுதில்
தந்திடும் ரமழான்
மஹ்ஷரில் மன்றாடி
ரய்யானில் சேர்த்திடும்
நேய நோன்பதனை
நல்கிடும் ரமழான்
=====
மங்கலம் பொங்கிடும்
மாதமாம் ரமழான்
எங்கெங்கும் நிறைந்தோன்
ஏற்றிடும் ரமழான்
தங்க நபி நாதரும்
போற்றிடும் ரமழான்
மர்ஹபன் அஹ்லன்
வஸஹ்லன் ரமழான்
வருகவே வருகவே
வாகையாம் ரமழான்
=====
வரிகள்: B.S அஹ்மது ஸாலிஹ் ஃபஹீமி